சுன்னாகத்தில் கோயில் கொள்ளையில் ஈடுபட்ட அறுவர் கைது
சுன்னாகம் பிரதேசத்தினை அண்டிய இணுவில் போன்ற பகுதிகளில் கோயில்களை உடைத்து செப்பு பாத்திரங்களை களவாடிவந்த அறுவரை சுன்னாகம் பொலிஸார் நேற்று முன்தினம் கைதுசெய்துள்ளனர்.
பல லட்சம் பெறுமதியான இந்த செப்பு பாத்திரங்களை விற்பனை செய்துவந்த இடத்திலிருந்து சுன்னாகம் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் சிந்தக பண்டார – தமிழ்மிரருக்கு தெரிவிக்கையில்…
‘இராணுவத்தினர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவருகிறார்கள் என்ற முறைப்பாடு பரவலாக எங்களுக்குக் கிடைத்தது. இங்குள்ள மக்கள் இதனையே எல்லா இடங்களிலும் சொல்லித் திரிந்தனர். ஆனால், அண்மையில் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கோயில் கொள்ளையில் ஈடுபட்ட ஆறுபேரை நாங்கள் கைதுசெய்தோம். சுழிபுரத்தினை சேர்ந்த 4 பேரும் கிளிநொச்சியை சேர்ந்த 2 பேருமே இவர்களாவர். இவர்கள் அனைவரும் சிறிய வயதினை உடையவர்கள். 17 தொடக்கம் 24 வயதுக்குட்பட்டவர்களே கைதுசெய்யப்பட்டவர்களாவர்.
கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர் படுத்தியபோது எதிர்வரும் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. நாங்கள் கைதுசெய்த இந்த கொள்ளைக்கும்பல் 20இற்கும் மேற்பட்ட கோயில்களில் கொள்ளையடித்துள்ளனர். இதில் 6 கோயில்களின் பொருட்களை மீட்டுள்ளோம். மக்களின் ஐயமும் இப்பொழுது நீங்கியுள்ளது…’ என்று குறிப்பிட்டார்.
மேலும் சில பதிவுகள்:
..பார்வையாளர்கள் 



































